திராவிட மாடல் காலாவதியான கொள்கை என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்ததற்கு திமுக எம்.பி. வில்சன் மற்றும் திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலளித்துள்ளனர்.
ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கையை புதுப்பிக்கும் முயற்சி என்றும், திராவிட மாடல் என்று எதுவும் இல்லை, அது வெறும் அரசியல் வாசகம் மட்டுமே என்று விமர்சனம் செய்தார். மேலும் திராவிட மாடல் கொள்கைகள் ‘ஒரே நாடு, ஒரே பாரதம்’ கொள்கைக்கு எதிரானது என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆளுநரின் இந்த விமர்சனம் குறித்து நியூஸ் 7 தமிழுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் தொலைபேசி வழியாக அளித்த பேட்டியில் கூறியதாவது:
அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆளுநர்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவி மறந்துவிட்டார். மாநிலங்களுக்கு ஆளுநர்களே தேவையில்லை என்பதுதான் எங்களின் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆளுநர் மாளிகைக்கு செலவு செய்யப்படும் வரிப்பணத்தை, மக்களுக்காக செலவு செய்யலாம்.
இதையும் படியுங்கள் : ”திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை” – ஆங்கில நாளிதழுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி
ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு ஓய்வுபெற்ற அதிகாரி. அவர் திராவிட மாடலை காலாவதியான கொள்கை என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அவர் தன்னை தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும். தனக்கான கடமைகள் மற்றும் பொறுப்புகளை தான் சரிவரச் செய்துள்ளேனா என்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஆளுநரின் இதுபோன்ற விமர்சனங்கள் மாநிலத்திற்கு உதவாது. மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.
இவ்வாறு திமுக எம்பி வில்சன் தெரிவித்தார்.
அதேபோல் திராவிட மாடல் காலாவதியான கொள்கை என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது குறித்து நியூஸ் 7 தமிழுக்கு திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் தொலைபேசி வழியாக அளித்த பேட்டியில் கூறியதாவது:
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே திராவிட மாடல். இது எப்படி நீர்த்துப்போகும்? ஒரே நாடு என்றால் சோழர்கள், பாண்டியர்களுக்கு ஏன் போர் வர வேண்டும்? ஒரே நாடாக இல்லாத காரணத்தால் தான் மன்னர் மானியம் என்ற திட்டமே வந்தது. எவ்வித வரலாற்று அறிவும், புரிதலும் இல்லாத மனிதரே நம்முடைய ஆளுநர் ஆர்.என்.ரவி.
இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.