‘விரைவாக கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை அரசு கைது செய்ய வேண்டும்’

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஒரு வாரத்தில் கண்டுபிடிப்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது, அதன்படி விரைவாக கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை அரசு கைது செய்ய வேண்டும் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஒரு வாரத்தில் கண்டுபிடிப்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது, அதன்படி விரைவாக கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை அரசு கைது செய்ய வேண்டும் என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான “நமது அம்மா” நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிய, அதிமுக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சில தினங்களுக்கு முன் நமது அம்மா ஆசிரியர் பொறுப்பிலிருந்து என்ன நான் விடுவித்துக் கொண்டேன், ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் அதிமுகவை நன்றாக எடுத்துச் செல்வார்கள் என்று நம்பி இருந்தேன். ஆனால், இன்று பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால், எங்கள் நம்பிக்கை பொய்த்துப் போனது. எனவே, என்னை நான் நமது அம்மா நாளிதழிலிருந்து விடுவித்துக் கொண்டேன் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இரட்டை தலைமையை மக்கள், தொண்டர்கள் என அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். 4 ஆண்டு ஆச்சியின் போது தேர்தல்களில் நல்ல வெற்றியைப் பெற்றார்கள். இரட்டை தலைமையில் கட்சியில் எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் இருந்தது. உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகிகள் வரை தேர்தல் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என இருவருக்கும் ஒரே படிவம் வழங்கப்பட்டு பதவிகள் தேர்வு செய்யப்பட்டதைக் கண்டு நாங்கள் எல்லாம் இவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்களே என்று நாங்கள் எல்லாம் மெய் சிலிர்த்துப் போனோம். கடந்த 23-ஆம் தேதி நடந்த பொதுக் குழுவுக்கு அனைத்து தீர்மானங்களையும் இறுதி செய்து நான் தான் இருவருக்கும் அனுப்பி வைத்தேன். அதை அத்தனையும் நிராகரிப்பதாக இபிஎஸ் தரப்பில் அறிவித்தார்களே, ஜெயலலிதாவுக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற தீர்மானமும் அதிலிருந்தது அதையும் அவர்கள் நிராகரிக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த போது நடந்தது போல், இந்த முறை பொதுக்குழு நடக்கவே இல்லை எனத் தெரிவித்த அவர், பொதுக்குழுவிற்குப் பொதுக்குழு உறுப்பினர்களே வரவில்லை ஆட்களை எல்லாம் வெளியிலிருந்து திட்டம் தீட்டி அழைத்து வந்திருந்தார்கள் என்று குற்றம் சாட்டினார்.

அண்மைச் செய்தி: ‘முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியானது’

எதோ ஒரு நோக்கத்தோடு அதிமுக பொதுக்குழுவில் ஆட்கள் திரட்டப்பட்டிருந்தனர். நிர்வாகிகளுக்குப் பின்னால் அமர வைக்கப்பட்டிருந்த சிலர் ஓ.பன்னீர்செல்வத்தை நாகூசும் வார்த்தைகளால் வசைமாரி பொழிந்தனர். பொதுக்குழுவில் திட்டமிட்டு திரைக்கதை எழுதி ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்டார். பொதுக்குழு மற்றும் செயற்குழுவை நேரடி ஒளிபரப்பு செய்தது திட்டமிட்ட ஒன்று. ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்ட போது மேடையிலிருந்த எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசாமல் இருந்தது ஏன்? கூச்சலிட்ட கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கண்டிக்கவில்லை. அதிமுக தலைமைப்பதவியை எப்படியாவது கைப்பற்றிட வேண்டும் என்று திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் நாகரிகமற்றது. அதிமுகவின் தலைமையைத் தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டுமே தவிர, நிர்வாகிகள் அல்ல. யாருடைய சுயநலம் அதிமுகவின் பிளவுக்குக் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். இரட்டை தலைமை மக்களால் ஏற்கப்பட்டது. அதிமுகவை ஓபிஎஸ் – ஈபிஎஸ் முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை பொய்த்துப் போயுள்ளது. 2 பேரும் ஒற்றுமையாகக் கட்சியைக் கொண்டு சென்றிருந்தால், அதிக வெற்றி பெற்றிருக்க முடியும் எனக் கூறினார்.

நில அபகரிப்பு நடப்பது போல அதிமுகவில் அரசியல் அபகரிப்பு நடக்கிறது எனத் தெரிவித்த அவர், தொண்டர்களை விலை கொடுத்து வாங்கிவிடலாம் என ஈபிஎஸ் தரப்பு நினைக்கிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மவுனம் காப்பது ஏன்? முதலமைச்சராக 4 ஆண்டுகள் இருந்த பழனிசாமி கோடநாடு வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய போதிய அக்கறை காட்டவில்லை. கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என தற்போதைய திமுக அரசுக்கு அதிமுக அழுத்தம் கொடுக்காதது ஏன்? அதிமுக ஆட்சியில் கோடநாடு வழக்கை முடிப்பதில் மட்டுமே கவனம். உண்மை குற்றவாளியைக் கண்டறிய ஆர்வம் இல்லை என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.