மதுரை அருகே ஓய்வூதியத்திற்காக 12 ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறார் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சௌடார்பட்டி – மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு. கடந்த 2009 ஆம் ஆண்டு சத்துணவு ஊழியராக பணியாற்றிய இவர் ஓய்வு பெற்றார். இவருக்கு 12 ஆண்டுகளாக ஓய்வூதியம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. ஓய்வூதிய ஆணை பெற சேடபட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடமும், மதுரை மாவட்ட ஆட்சியரிடமும் கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு மனுக்களை அளித்துள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றார் பாலு.
தொடர்ந்து அரசு அலுவலங்களில் வைத்த கோரிக்கை மற்றும் அவர் பணிக்கால ஆவணங்கள், ஓய்வு பெற்ற பின் தணிக்கை குழு அறிக்கை என பல்வேறு ஆவணங்களை வழங்கிய பின்னும் காலம் தாழ்த்தி வருவதால் வாழ்வாதரத்திற்கே பெரும் அவதியுற்று வருவதாக கூறுகிறார். இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பாலு மாவட்ட ஆட்சியர் வளாகத்திலேயே மயக்கமடைந்தாக கூறப்படுகிறது. அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த அரசு ஊழியர் சங்கத்தினர், பத்திரமாக அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
-சௌம்யா.மோ







