700 கிராம் குழந்தையை ஓராண்டுக்குள் 6.500 கிலோ எடைக்கு கொண்டு வந்த அரசு மருத்துவர்கள்!

பிறக்கும் போது வெறும் 700 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தையை ஓர் ஆண்டுக்குள் 6 கிலோ 500 கிராம் எடைக்கு கொண்டு வந்து, கேக் வெட்டி குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடிய மருத்துவர்களின்…

பிறக்கும் போது வெறும் 700 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தையை ஓர் ஆண்டுக்குள் 6 கிலோ 500 கிராம் எடைக்கு கொண்டு வந்து, கேக் வெட்டி குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடிய மருத்துவர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் எம்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த மினிப்ரியா – புதுராஜா தம்பதிக்கு 2-வது ஆக அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.  ஆனால் குறை பிரசவத்தால் குழந்தையின் எடை 700 கிராம் மட்டுமே இருந்தது.  இந்த குழந்தையை உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர்களான ராதாமணி, செந்தில்நேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் 66 நாட்கள் தீவிரமாக கண்காணித்து 1400 கிராம் எடையுடைய குழந்தையாக உருவாக்கி நல்ல ஆரோக்கியத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு குறைபாடுகளை
சரி செய்யும் பொருட்டு,  இந்த குழந்தையை தொடர்ந்து ஓர் ஆண்டாக மூளை வளர்ச்சி,
கண் பார்வை,  கை, கால்கள் வளர்ச்சி,  வளர்ச்சிக்கு ஏற்ற உடல் எடை உள்ளிட்டவற்றை
கண்காணித்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.  இன்று எந்த குறைபாடுகளும் இல்லாத குழந்தையாக சுமார் 6 கிலோ 500 கிராம் எடையுடன் நல்ல ஆரோக்கியமான குழந்தையாக உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

இந்த சாதனையையும்,  குழந்தையின் பிறந்த நாளையும் கொண்டாடும் விதமாக மருத்துவமனை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் குழந்தைக்கு பிறந்தநாள் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.