25 C
Chennai
December 3, 2023
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா கட்டுரைகள் தமிழகம்

பாலின தடைகளை உடைத்து கனவை நனவாக்கிய சிறுமிகள்


சுகிதா சாரங்கராஜ்

கட்டுரையாளர்

 

பாயல்… ராஜஸ்தானில் அஜ்மீர்  மாவட்டத்தில் சச்சியாவாஸ் கிராமத்தை  சேர்ந்த சிறுமி. அரசு பள்ளியில் படித்து வரும் பாயலுக்கு கால்பந்து விளையாட்டு மீது அதீத ஆர்வம் ‌.   பள்ளி முடிந்து வீடு திரும்பும் பாயல் ஆண்களுடன் கால்பந்து விளையாடிய போது அவரை அவரது பெற்றோர் கண்டித்தனர் . தண்ணீர் எடுத்து வருவது ,பாத்திரம் தேய்ப்பது  போன்ற வீட்டு வேலைகளை செய்யாமல்  பாயல் இப்படி வீட்டை விட்டு வெளியே சென்று விளையாடுவதை அவர்களது பெற்றோர் விரும்பவில்லை . ஆனாலும் பாயலின்  கால்பந்து ஆர்வத்தையும்  அவரது விளையாட்டு திறனையும், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜமுனா லால் கவனித்து ஊக்குவித்தார் .

இந்த நேரத்தில் தான் அவரது வாழ்வில் ஒரு திருப்பம் நேர்ந்தது.‌ அஜ்மீர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு 15 வயதாகிவிட்டாலே திருமணம் செய்து வைத்து விடுவது பெற்றோர்களின் வழக்கம் . அதே போலவே பாயலுக்கு 15 வயதான போது அவரது பெற்றோர் அவருக்கு குழந்தை திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு பெண்ணை அனுப்பி வைக்கும் கானா என்ற ஊர்வல சடங்கின் போது,  தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று மறுத்து கணவன் வீட்டுக்கு செல்லாமல் பெற்றோரோடே இருந்து விட்டார் .  தன்னை படிக்கவும் ,கால்பந்து விளையாடவும் அனுமதித்தால் போதும் ,தான் குடும்பத்தை , வீட்டு வேலைகளை ,வயல் வேலைகளையும் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்து கடும் போராட்டத்திற்கு பிறகு அவரது கால்பந்து  கனவிற்கு  பெற்றோரிடம் அனுமதி பெற்றார்.

படம் உதவி – முரளிகிருஷ்ணன் சின்னதுரை

 பாயல் மட்டுமல்ல  காயத்ரி பவார்  ,சாவித்ரி ஆகிய இருவரும் பெற்றோர்களின் கட்டாய திருமணத்தை எதிர்த்து போராடி கால்பந்து விளையாட தொடங்கினர். இவர்களோடு கும்கும், பூஜா உள்ளிட்ட சிறுமிகள் கால்பந்து விளையாட முன்வந்தார்கள் . பாயல் தான் அவர்களை எல்லாம் பெண்களுக்கான கனவு உலகத்தில் சாதனை படைக்க அழைத்து வந்தார் என்று சொல்லலாம். பாயலின் சம்பவத்திற்கு பிறகு பெற்றோர்கள் குழந்தை திருமணம் செய்து வைத்தால் கூட 18 வயது வரை அந்த கானா சடங்கை நடத்த தயங்கினர். பாயல் தான் சச்சியாவாஸ்  கிராமத்தில் இருந்து விளையாட்டிற்காக வெளியே வந்த முதல்  சிறுமி. ஆண்களோடு சேர்ந்து கால்பந்து விளையாடி பயிற்சி பெற்றார் பாயல்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

படம் உதவி – முரளிகிருஷ்ணன் சின்னதுரை

 சச்சியாவாஸில் உள்ள பெண்கள் விளையாட்டு மைதானம் குப்பை கொட்டும் இடமாக மாறி இருந்தது . தினமும் பள்ளி முடித்து இந்த சிறுமிகள் அந்த மைதானத்தை சுத்தம் செய்து கால்பந்து மைதானமாக மாற்றி பயிற்சி மேற்கொண்டனர் .  ஆரம்பத்தில் சுடிதார் அணிந்தே இந்த சிறுமிகள் கால்பந்து பயிற்சி  பெற்றனர். கால்பந்திற்கான கால்சட்டை (shorts) அணிய கிராமங்களில் எதிர்ப்பு எழுந்தததே அதற்கு காரணம் . பிறகு லெக்கிங் மாதிரியான முழு நீள அளவிலான  பேண்ட் அணிந்து அதன் மேலே கால்சட்டை அணிந்து விளையாடி உள்ளனர். இன்றும் இத்தகைய உடையை தான் அணிந்து பயிற்சியில் ஈடுபடுகின்றனர் .

 

பாயல் பங்கேற்ற முதல் போட்டி மணிப்பூரில் நடைபெற்றது. அந்த போட்டியில் பாயல் மற்றும் தனது சக தோழிகளுடன் சிறப்பாக விளையாடி கோப்பையை அடித்து வந்தார். வெற்றி பெற்று தங்க பதக்கத்தோடு திரும்பியவர்களை சச்சியவாஸ் கிராமமே  வரவேற்றது. அதைத்தொடர்ந்து பாயல்  மாநில அளவிலான போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வெற்றி பெற்றதோடு பரிசுத் தொகைகளையும் பெற்று வந்துள்ளார்.  இவரது சாதனைகளை கவுரவிக்கும் வண்ணம் Unicef நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவராக  அழைக்கப்பட்டிருந்தார் .  அவரின் கால்பந்து கனவு நனவானதை நம்மிடம் விவரித்தார். அவரிடம் பாயல் என்றால் என்ன என்று கேள்வி எழுப்பினோம் . கால்களில் அணியும்  கொலுசு  என்று  பாயல் கூறியது கூடுதல் பொருள் பொதிந்ததாக அமைந்தது.

படம் உதவி – முரளிகிருஷ்ணன் சின்னதுரை
பாயலை போன்றே அஜ்மீர் மாவட்டத்திலுள்ள மற்றொரு கிராமமான  ஹன்சியவாஸ் கிராமத்தில் பிறந்தவர் சப்னா குஜ்ஜார் . கால்பந்தில் இவரது திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக  கேப்டனாக சிறப்பாக விளையாடியதற்காக Unicef உடைய இளைஞர்களுக்கான தூதுவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .  அவரது கிராமத்தில் இருந்து பல பெண் குழந்தைகளை,  குழந்தை  திருமணத்திலிருந்து மீட்டு அவர்களை கால்பந்து விளையாட்டில் ஈடுபட வைத்தவர் சப்னா.  கல்வியிலும் சிறந்து விளங்கியதற்காக ராஜஸ்தான் அரசு வழங்கும்  இந்திரா பிரியதர்ஷனி விருதுடனான  ஒரு லட்ச ரூபாய்   பரிசுத் தொகையையும் வென்றுள்ளார் . வருங்காலத்தில் தேசிய ,சர்வதேச போட்டிகளில் பங்கேற்று சாதனை படைப்பதோடு ஜபிஎஸ் கனவுக்காவும் ஓடிக் கொண்டிருக்கிறார் சப்னா குஜ்ஜார் .
அதே போன்று ஜார்கண்டிலும்  தன்னார்வ அமைப்புகளோடு சேர்ந்து குழந்தை திருமணத்தை நிறுத்தி நிறைய பெண் குழந்தைகளை கால்பந்திற்கு அழைத்து வந்துள்ளனர் . விளையாட்டு  மூலம் குழந்தை திருமணத்தை நிறுத்த முடியும் என்றும் விளையாட்டு ஒன்றே பாலின பேதத்தை கலைவதோடு பெண்களுக்கான தடைகளை உடைத்து பல்வேறு சாதனைகளை புரிய சர்வதேச அளவில் உதவும் என்பதால்  கால்பந்து கிளப்புகள் அதிகளவில் அந்த பகுதிகளில் உருவாக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது .
இந்தியாவில் குழந்தை திருமணம் சட்டப்படி குற்றம் என்றாலும்  இந்தியாவில்  இன்றைக்கும் குழந்தை திருமணம்  அரங்கேறிக் கொண்டே இருக்கிறது.  இதனை தடுப்பதற்கு  ஐ.நா குழந்தைகள் நல நிதியமான Unicef  மற்றும்  பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து பணியாற்றுகின்றன. குறிப்பாக ராஜஸ்தான் ,பீகார் ,உத்தர பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில்  குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெறுவதால் அங்கே இந்த இயக்கங்கள் கூடுதல் கவனம் செலுத்தி பாலின சமத்துவத்திற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளன‌.
படம் உதவி – முரளிகிருஷ்ணன் சின்னதுரை
மேலே குறிப்பிட்ட மாநிலங்கள் மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களிலும் குழந்தை திருமணம் நடைபெற்று வருகிறது. அதில் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டில் கடந்த அக்டோபரில் வெளியான  புள்ளி விவரத்தின் அடிப்படையில், ஒரு நாளைக்கு பத்து குழந்தை திருமணங்கள் தமிழ்நாட்டில் நடைபெறுகின்றன. இது நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.   வளர்ந்த முன்னேறிய கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. ஆனால் குழந்தைகள் திருமணம் என்று வரும் போது , தமிழ்நாட்டின் நிலை இப்படியாகத்தான் இருக்கிறது. கொரோனாவிற்கு பிறகு குடும்ப பொருளாதார காரணிகள் குழந்தை திருமணத்தில் பெரிய பங்காற்றுகின்றன. இதனைக் கண்டறிந்து சமூக நலத்துறை 38 மாவட்டங்களில் குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டது.
இதே போன்று அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற்றாலும் குழந்தை திருமணங்களை தடுப்பது என்பது மிகப்பெரிய சவாலாக தான் உள்ளது. இந்த குழந்தை திருமணம்  குழந்தைகளுடைய, ஏதுமறியா  இனிமையான  பருவத்தை , அவர்களுடைய கல்வியை,  எதிர்காலத்தை பறிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய உடல் ரீதியான சுதந்திரத்தையும் பறிக்கிறது. இந்தியாவில் ஐந்தில் மூன்று குழந்தை இளம் வயதிலேயே கருவுறுகிறார்கள். அதாவது குழந்தை திருமணங்கள் அதிகம் நடப்பதால் 18 வயதுக்கு முன்பே அவர்கள் கருவுற்று விடுகிறார்கள். அதனால் அத்தகையவர்களுக்கு ரத்த சோகை போன்ற நோய்களும், குழந்தை பெறுவதற்கான உடல் வலிமை இல்லாததால் குழந்தை பேரிலும் கடும் சவால்களை இவர்கள் சந்திக்கிறார்கள்.
 இந்தியாவில் மார்ச் 2022 கணக்கின்படி 22 கோடி குழந்தைகளுக்கு,  குழந்தைத் திருமணம் நடைபெற்றது.   குழந்தை திருமணத்திற்கான உலக புள்ளி விவரத்தில்  மூன்றில்  ஒரு பங்கு இந்தியாவில் மட்டுமே நடைபெறுகின்றன. இதில் 10 கோடி குழந்தைகளுக்கு 15 வயதுக்குள் குழந்தை திருமணம் நடைபெறுகிறது.  2019 ம் ஆண்டு இந்தியாவில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக 519 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன. கொரோனா பெருந்தொற்று  காலத்தில் அவை அதிகரித்து 2020ல்  மட்டும் 785 குழந்தை திருமணங்கள் தொடர்பான வழக்குகள் பதிவாகி இருப்பதாக சொல்கிறது Unicef மற்றும் தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் வழங்கும் புள்ளிவிபரங்கள்.
கொரோனாவில், உளவியல் ரீதியாகவும் ,உடல் ரீதியாகவும் ,பொருளாதார ரீதியாகவும் கொரோனாவின் தாக்கத்தால் ஏற்பட்ட விளைவுகளில் அதிகம் பாதிப்புக்குள்ளானவர்கள்  பெண்கள் மற்றும் குழந்தைகள் தான். ராஜஸ்தான் ,மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீர்,உத்திரபிரதேசம் ,டெல்லி ,ஹரியானா  உள்ளிட்ட மாநிலங்களில் 2019 ல் மட்டும் நடைபெற இருந்த குழந்தை திருமணங்கள் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மற்றும் cry அமைப்பு மூலம் தடுத்து  நிறுத்தப்பட்டன. 2022 கொரோனா பேரிடருக்கு பிறகு 1022 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
அதிக அளவில் குழந்தை திருமணங்கள் குறித்த  வழக்குகள் பதிவாவது விழிப்புணர்வு  ஏற்பட்டுள்ளது என்பதை காட்டுவதாக இருந்தாலும், உண்மையில் 2021 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 96 சதவீத வழக்குகள் இன்னும் நிலுவையில் தான் உள்ளன. அதாவது 2761 வழக்குகள் குழந்தை திருமண வழக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால் அதில் இன்னும் 2865 வழக்குகள் அப்படியே நிலுவையில் உள்ளன. வெறும் நான்கு சதவிகித  வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட்டு, தீர்வை கண்டுள்ளன என்பதும் வேதனைக்குரியது.     
குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி,  அவர்களை விளையாட்டில் ஈடுபட வைக்க வேண்டும் என்றால்,  பெண் குழந்தைகள் மீது பொது சமூகம் கட்டமைத்துள்ள பொதுவான கருத்துகளில் அவர்களை விடுவிக்க வேண்டியது அவசியம்.  இதனை மையமாக வைத்து,  Unicef இந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதியன்று, அதாவது  சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பாலின சமத்துவத்தை முன்னெடுக்கும்  பரப்புரையை மேற்கொண்டது. சமீபத்தில் தான் பிசிசிஐ, ஆண்கள் கிரிக்கெட் அணியின் ஒரு நாள் ஊதியத்திற்கு நிகராக பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் அதே அளவிலான ஊதியத்தை அறிவித்தது . அது நாடு முழுவதும் பேசு பொருளானது. 
” A better future for every child ” ,  என்பதே இந்த ஆண்டு சர்வதேச குழந்தைகள் தினத்துக்கான கருப்பொருளாக ஐ.நா அறிவித்தது.  அதை முன்னெடுக்கும் விதமாக டெல்லியில்  Unicef  பாலின சமத்துத்திற்கான  முன்னெடுக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகள்  இணைந்து விளையாடும் கால்பந்து போட்டி ஒன்றை வடிவமைத்திருந்தனர் . இந்த போட்டியில்  Unicef ன் தெற்காசிய தூதுவரும்  இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கட் நட்சத்திரமுமான சச்சின் டெண்டுல்கர் மற்றும் Unicef இந்திய  நட்சத்திர தூதுவரும் பாலிவுட் நடிகருமான ஆயுஷ்மான் குரானா  இருவரும் பாலின சமத்துவத்திற்கான கால்பந்து போட்டிக்கு தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.  இந்தியா முழுவதிலும் பின் தங்கிய மாநிலங்களில் இருந்து தனது திறமையால் சாதனை படைத்த கால்பந்தாட்ட வீரர் வீராங்கனைகள பங்கேற்ற போட்டியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆயுஷ்மான் குரானா  இருவரும் கால்பந்து போட்டியில் விளையாடினர்.
யுனிசெ ஃப்பின்  இந்திய பிரதிநிதியான சிந்தியா மெக்கஃப்ரே “உலக குழந்தைகள் தினம் நாம் அனைவருக்கும் ஒரு கூட்டுப் பொறுப்பை உருவாக்குகிறது. குழந்தைகளை பாதுகாப்பது குறிப்பாக பெண் குழந்தைகளை பாதுகாப்பது, அவர்களுடைய திறமைகளை கண்டறிந்து வளர்ப்பது, பொது சமூகத்தில் பெண்களுக்கு இருக்கும் தடைகளை உடைப்பது, ஏற்றத்தாழ்வுகளை களைவது, ஆகியவற்றை திறம்பட செய்ய வேண்டியது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு” என்று கூறினார்.  அவரைத் தொடர்ந்து பேசிய சச்சின் டெண்டுல்கர்,” விளையாட்டு தான் நம்மை ஒரு நல்ல மனிதனாக வளர்க்க உதவும். ஏற்றத்தாழ்வுகளை களைய உதவும் என்பதை என் அனுபவத்தில் நான்  உணர்ந்திருக்கிறேன். விளையாட்டு தான் பெண்களுக்கு சிறந்த வல்லமையும் நம்பிக்கையையும் தரக்கூடியதாக இருக்கிறது” என்றார்.
அடுத்ததாக பேசிய பாலிவுட் நட்சத்திரம் ஆயுஷ்மான் குரானா,” விளையாடும் போது மட்டும் தான், ஆண்கள் பெண்கள் என்று பார்க்காமல் சரிசமமாக பார்த்து அவர்களுடைய திறமையின் மூலமாக அவர்களை அடையாளம் காண முடியும்” என்பதை எடுத்துக் கூறினார். உலக குழந்தைகள் தினத்தில் ஆண் பெண் ஒற்றுமை,பாலின பேதமின்றி இருவரையும் சமமாக பாவித்தல் என்பதை விளையாட்டின் மூலமே உறுதிப்படுத்த முடியும் என்பதை எண்ணியே இத்தகைய நிகழ்வுக்கு யூனிசெப் ஏற்பாடு செய்திருந்தது சிறப்பான ஒன்று.
  • சுகிதா சாரங்கராஜ்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy