காரைக்குடியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மிக்சி, கிரைண்டர், செல்போன் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும்
தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டது.
இதையடுத்து, இன்று ஒரே நாளில் 40 ஆயிரம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி
செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் 30 லட்சம் தடுப்பூசிகள்
இருப்பு உள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு
நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் முழுவதும் 750 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடியில் உள்ள சோமுபிள்ளை தெருவில் நண்பகல் 12 மணிக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு, குலுக்கல் முறையில் மிக்சி, கிரைண்டர், எலக்ட்ரானிக் அடுப்பு, செல் போன் போன்ற பொருட்கள் வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, நண்பகல் 12 மணிக்குள் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந் தெடுக்கப் பட்டவர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.








