கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காவல் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில அளவில் மதுவிலக்கு தொடர்பாக தகவல் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 பயன்பாட்டில் உள்ளதை, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பிரபலப்படுத்தி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆகியோரின் வாட்ஸ் ஆப் எண்களை அறிவித்து, அதன்மூலம் பெறப்படும் புகார்களை கூடுதல் காவல் துறை இயக்குநர் (மதுவிலக்கு அமலாக்கம்) கண்காணித்து உடனுக்குடன் எடுக்கும் தொடர் நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டுமென்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், கள்ளச்சாராயம், போதை பொருட்கள் தடுப்பு தொடர்பாக ஆட்சியர் தலைமையில் வாரந்தோறும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தவும், அது தொடர்பாக, ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுரைகளை வழங்கவும், இது தொடர்பான அறிக்கையை, ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை அன்று உள்துறைச் செயலாளரின் மூலம் முதலமைச்சரின் அலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மதுவிலக்கு தொடர்பான கட்டணமில்லை தொலைபேசி எண்ணான 10581-ஐ மக்களிடையே பிரபலப்படுத்துவதுடன், காவல் உதவி கண்காணிப்பாளர் மற்றும் துணைக்காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் வாட்ஸ்அப் எண்களை அறிவித்து புகார்களை பெற்று நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்களிடையே கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டுமென்றும், இதனை பள்ளிகள், கல்லூரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுயஉதவிக்குழு மகளிரைக் கொண்டு நடத்திட வேண்டுமென்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
தொழிற்சாலைகளில். எரிசாராயம் மற்றும் மெத்தனால் பயன்பாட்டைக் கண்காணித்து, அது விஷச்சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை கண்காணிப்பதுடன், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள்களை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்தத் தொழிலிலிருந்து விடுவித்து, அரசின் பல்வேறு வாழ்வாதாரத் திட்டங்கள் மூலம் பயன்பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா