புதுச்சேரியில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளதால் நாளை முதல் 5 இடங்களில் 144 தடை சட்டம் அமுலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பல்வேறு நாடுகளில் இருந்து முக்கிய பிரதிநிதிகள் வர உள்ளதால் மாநாடு நடைபெறும் இடம், பிரதிநிதிகள் தங்கும் விடுதி மற்றும் விமான நிலையம் ஆகிய 5 இடங்களில் 144 தடை சட்டம் நாளை காலை முதல் அமுலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜி-20 மாநாட்டின் ஆரம்பகட்ட கூட்டம் வரக்கூடிய ஜனவரி 30 மற்றும் 31ஆம் தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற உள்ள நிலையில், கூட்டத்திற்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வல்லவன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் கூறியதாவது..
”ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள இந்த பெருமை மிகு தருணத்தில் நாடு
முழுவதும் 200 நகரங்களில் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அதன் ஒரு பகுதியாக
புதுச்சேரியில் வரும் 30 மற்றும் 31 தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க ஜி.20 உறுப்பு நாடுகள் மற்றும் 20 நட்புறவு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜி-20 யின் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த அனைத்து தரப்பு மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
புதுச்சேரியில் நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கு இந்தோனேசியா, இந்தியா மற்றும் பிரேசில் நாட்டை சேர்ந்த 3 விஞ்ஞானிகள் தலைமை ஏற்று நடத்தவுள்ளனர். மாநாடு காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். பல்வேறு நாடுகளை
சேர்ந்த 75 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
பல்வேறு நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வருவதால் புதுச்சேரி முழுவதும் பலத்த
போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டி.ஐ.ஜி ஒருவர் தலைமையில் 37 பேர்
கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் அரக்கோணத்தில் இருந்து புதுச்சேரி
வருகை தந்துள்ளனர்.
மேலும் ஜி 20 பிரதிநிதிகளில் பாதுகாப்பு கருதி மாநாடு நடக்கும் இடம், பிரதிநிதிகள் தங்கும் விடுதி மற்றும் விமான நிலையம் உள்ளிட்ட 5 இடங்களில் 144 தடை சட்டம் நாளை காலை முதல் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் கூட்டம் போடவோ போராட்டங்கள் நடத்தவோ தடை விதிக்கப்படுகிறது.
மேலும் இந்த மாநாட்டின் காரணமாக புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு
விடுமுறை ஏதும் அறிவிக்கப்படவில்லை, அனைத்து கடைகளும் வழக்கம் போல் இயங்கும்” என மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார்.
– யாழன்