இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் மட்டுமே 3 முதலமைச்சர்களை சினிமாவில் இருந்து பெற்றிருக்கிறது. சினிமாவுக்கும் அரசியலுக்குமான தொடர்பு தமிழ்நாட்டில் அவ்வளவு வலிமையானது. திரையில் நீதிக்காக போராடுபவர்கள் அரியணையில் அமர்ந்த பின்னும் அதையே செய்வார்கள் என்ற பின்பம் தமிழ்நாட்டில் சற்று கூடுதலாக பரவி இருப்பதை எவராலும் மறுக்க முடியாது.
முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதாவில் தொடங்கி விஜயகாந்த் வரை சினிமாவில் இருந்து அரசியலுக்கு போனவர்கள் அங்கு ஏற்படுத்திய தாக்கம் ஏராளம். இந்த வரிசையில், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவார்களா? மாட்டார்களா? என தமிழ்நாடு எதிர்பார்த்த இவரும் ரஜினிகாந்த் மற்றும் விஜய். ஏற்கனவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்த நிலையில், இன்று (பிப். 02) நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.
நடிகர் விஜய்க்கும் திரைத்துறைக்கும், அரசியலுக்கும் இடையேயுள்ள பிணைப்பை காணலாம்…
திரைத்துறையும் நடிகர் விஜய்யும்:
நடிகர் விஜய் தன்னுடைய 10-வது வயதிலேயே படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். விஜய்யின் நடிப்பில் ‘வெற்றி’ என்ற படம் கடந்த 1984-ம் ஆண்டில் வெளியானது. இந்தப் படத்தில் நடித்ததற்காக அப்போதே தயாரிப்பாளரும் நடிகருமான பிஎஸ் வீரப்பாவிடம் இருந்து 500 ரூபாய்க்கான செக்கை பெற்றுள்ளார் விஜய். இந்த வெற்றிப் படத்தை தொடர்ந்து விஜய்யின் வாழ்க்கையில் வெற்றி அத்தனை எளிதாக கிடைத்துவிடவில்லை. அதிகமான முயற்சிகளை தொடர்ந்தே தற்போது ரசிகர்கள் கொண்டாடும் தளபதியாக நடைபோட்டு வருகிறார். 1992-ம் ஆண்டு தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘மாண்புமிகு மாணவன்’ திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய். அப்போது அவருக்கு வயது 18. எனினும் அப்படத்தில் விஜய் ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவே முன்னிறுத்தப்பட்டார்.













