டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்துகொள்வதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 அமைப்புக்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. ஜி-20 குழுவின் 18வது மாநாடு வரும் செப்டம்பர் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனேசி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் கிஷிடா உள்ளிட்டோா் இந்த மாநாட்டில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. மேலும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்றும் பதிலாக அந்த நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அந்த நாட்டின் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து தொடர்ந்து அவர் வங்கதேசமும் செல்கிறார். முன்னதாக மேக்ரான், உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமா் புமியோ கிஷிடா உள்ளிட்டோரும் ஸெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசியுள்ளனர். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதனிடையே டெல்லி ஜி20 மாநாட்டுக்கு உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.