பிரான்ஸ் சட்டப் பேரவைத் தேர்தல்: புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் வாக்குப் பதிவு

பிரான்ஸ் நாட்டின் சட்டப் பேரவை தேர்தலையொட்டி, இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்காக தேர்தல் வாக்குப் பதிவு, புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் தொடங்கியது. இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடியிருப்பாளர்கள்…

பிரான்ஸ் நாட்டின் சட்டப் பேரவை தேர்தலையொட்டி, இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்காக தேர்தல் வாக்குப் பதிவு, புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் தொடங்கியது.
இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடியிருப்பாளர்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில், கடந்த எப்ரல் 10 மற்றும் ஏப்ரல் 24ஆம் தேதிகளில் நடந்த பிரான்சு நாட்டின் குடியரசுத் தலைவருக்கான தேர்தல்களில் பங்கேற்று வாக்களித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தற்போது, பிரான்ஸ் அரசு தனது பிரெஞ்சு குடியுரிமையுள்ள குடிமக்களுக்கான சட்டப் பேரவை பிரதிநிதியை நியமிக்க வாய்ப்பு வழங்குகிறது, அதற்கான தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் பெரும்பான்மை வயதை எட்டிய மற்றும் தூதரக தேர்தல் பட்டியலில் பதிவு செய்யப்பட்ட பிரெஞ்சு குடிமக்களுக்கு, அவர்கள் வசிக்கும் நாட்டில் வாக்களிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அந்த வகையில் கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 4,463 பிரெஞ்சு குடிமக்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். இவர்கள், தங்களது வாக்கினை வாக்குப் பெட்டியில் நேரடியாகவோ, ப்ராக்ஸி மூலமாகவோ, அஞ்சல் மூலமாகவோ அல்லது இணைய வழி மூலமாகவோ வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் சுற்று வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.  ஜூன் 19-ஆம் தேதி இரண்டாவது சுற்று வாக்களிக்க அழைக்கப்படுவார்கள், இந்தத் தேர்தலுக்காக புதுச்சேரியில் இரண்டு மையங்களும், சென்னை மற்றும் காரைக்காலில் தலா ஒரு மையங்கள் என 4 இடங்களில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்து, 6 தனித்தனி வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன.
-ம.பவித்ரா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.