தஞ்சை அருகே சரக்கு ஏற்றி வந்த லாரி பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான நிலையில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
திருச்சியில் இருந்து சரக்கு ஏற்றி கொண்டு லாரி ஒன்று திருக்காட்டுப்பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தது. செல்லும் வழியில் வெண்ணாற்றுப் பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது லாரியின் பின்னால் வந்த டிராக்டர் மோதியதில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்தார். இதனை தொடர்ந்து லாரி பாலத்தில் இருந்து நிலை தடுமாறி தலைகுப்புற வெண்ணாற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு வாகனத்தின் மீது அமர்ந்து வந்த கார்த்திக் என்பவர் கவிழ்ந்த வண்டியில் கீழ் பகுதியில் சிக்கி உயிரிழந்தார். வாகனம் தலைகுப்புற கவிழ்ந்ததால் ஜேசிபி எந்திரம் உதவியுடன் விபத்துக்கு உள்ளான வாகனம் தூக்கப்பட்டு அடியில் சிக்கி இருந்த கார்த்திக் என்பவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
மேலும் சரக்கு வாகனத்தின் ஓட்டுனர் மொய்தீன் கான் உட்பட அசோகன், கருப்பசாமி, நிசாய் அகமது, சக்தி ஆகியோர் காயத்துடன் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பூதலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







