இலவசங்களுக்கு தடைக்கோரிய வழக்கை 3 நீதிபதிகள் அமர்வு முன்பு விரைவில் விசாரணையை பட்டியலிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல்களின் போது இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யப்படி உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் வழக்கு தொடர்ந்தார். இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவை என்பதால் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
இதனிடையே, இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாஜக வழக்கறிஞர் அஸ்வின் உபாத்யாய் வாதிட்டார். ஏற்கனவே உள்ள தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், வாக்குறுதிகள் தொடர்பாக தேர்தல் ஆணையர் தலைமையில் பொருளாதார நிபுணத்துவம் பெற்றவர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, வாதாடிய திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த வழக்கு முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது என கூறினார். எனவே, நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஏற்கனவே இந்த வழக்கை 3 நீதிபதிகள் முன்பு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். அதன்படி 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்றும் இந்த வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு விரைவில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி யு.யு.லலித் அமர்வு உத்தரவிட்டது.








