சென்னையில் பெய்த தொடர் மழை காரணமாக வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய சுரங்கப்பாதையில் சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்து மழைநீரில் சிக்கியது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால், பல்வேறு முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை மணலியில் இருந்து பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்த 64சி மாநகர பேருந்து, வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் சிக்கியது. இதனால் பேருந்திற்குள் இருந்த 26 பயணிகள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
இதையடுத்து தகவலறிந்து, வடசென்னை தீயணைப்பு நிலை அதிகாரி லோகநாதன்
தலைமையிலான 20 மீட்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கயிற்றின் உதவியுடன் 26 பயணிகளையும் அவர்கள் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, வியாசர்பாடி ஜீவா ரயில் நிலைய சுரங்கப்பாதையில் தேங்கி உள்ள மழை தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.







