முன்னாள் அதிமுக எம்.பி.யான மைத்ரேயனை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி- ஓபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை பிரச்சினை எழுந்த போது கூட முன்னாள் எம்.பி.யான மைத்ரேயன் ஓபிஎஸ் அணியில் இருந்தார். ஓபிஎஸ் அணியினருடன் எல்லா ஆலோசனைகளிலும் கலந்து கொண்ட மைத்ரேயன், திடீரென எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் நேற்றைய தினம் மீண்டும் ஓபிஎஸ் அணியில் மைத்ரேயன் இணைந்தார். நேற்றைய தினம் சென்னை எழும்பூரில் மாற்றுக் கட்சியினர் ஓபிஎஸ் அணியில் இணையும் விழாவில் மைத்ரேயனும் இணைந்தார். அப்போது அவர் கூறுகையில், அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழிநடத்தும் திறமை ஓபிஎஸ்ஸுக்கு மட்டும் தான் உள்ளது. எனக்கு உடல்நிலை சரியில்லாத போது ஓபிஎஸ் தொலைபேசியில் அழைத்து என்னை விசாரித்தார். பழனிசாமி அணியில் சேர்ந்த 108 நாட்களில் நான் மீண்டும் ஓபிஎஸ் அணிக்கு திரும்பியுள்ளேன் என்றார்.
இதைத்தொடர்ந்து, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்;
கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், முன்னாள் எம்.பி., மைத்ரேயன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியின் உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்வதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.