பாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சரின் உதவியாளர், பாதுகாப்பு காவலரிடம் விசாரணை!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் புகார் வழக்கில் அமைச்சரின் உதவியாளர், பாதுகாப்பு காவலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சரான மணிகண்டன் மீது நடிகை ஒருவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி…

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் புகார் வழக்கில் அமைச்சரின் உதவியாளர், பாதுகாப்பு காவலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

முன்னாள் அமைச்சரான மணிகண்டன் மீது நடிகை ஒருவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி புகார் அளித்தார். இதனையடுத்து மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் அடையாறு போலீசார் வழக்குபதிவு செய்து அவரை பிடிக்க போலீசார் ராமநாதபுரம் சென்றனர். ஆனால் அவர் தலைமறைவானார். இந்நிலையில், அவர், முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

விசாரித்த நீதிபதி முன் ஜாமீன் மனுவை ரத்து செய்து, வருகிற 9ஆம் தேதி வரை அவரைக் கைது செய்யக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், மணிகண்டன் அமைச்சராக இருந்தபோது, அவருக்கு பணிப்புரிந்த அரசு கார் ஓட்டுனர், பாதுகாவலர், அரசு உதவியாளர் ஆகியோர் நேரில் விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அவர்கள் நேற்று ஆஜராகவில்லை.

இந்நிலையில் இன்று காலை, அரசு பாதுகாப்பு அதிகாரி கெளரீஸ்வரன் மற்றும் அமைச்சரின் உதவியாளர் சரவணபாண்டி ஆகியோர் அடையாறு காவல் நிலையத்தில் ஆஜராகினர். அவர்களிடம் 2 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வழக்குக்கு தேவையான சில முக்கிய தகவல்கள் பெறப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.