தமிழ்நாட்டில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றி கட்டப்படும் ரிசார்ட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், “நடுவட்டம் கிராமத்தில் வனப்பகுதி நிலத்தை அளவீடு செய்து எல்லையை வரையறுக்க வேண்டும். இதுதொடர்பாக வனத் துறை கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.
இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனத்துறை அதிகாரி ஆகியோர் உடனடியாக நடுவட்டம் கிராமத்தில் ஆய்வு செய்து, ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை மீட்க வேண்டும் எனத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
அத்துடன், வனப்பகுதியில் இருந்து மருத்துவர் கவிதா செண்பகம் என்பவர் கட்டும் ரிசார்ட்டுக்கு தண்ணீர் எடுப்பதை தடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழ்நாட்டில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது எனவும் அறிவுறுத்தினர்.







