உதகை பைன் பாரஸ்ட் சுற்றுலா மையத்தில் புலி ஒன்று முகாமிட்டிருப்பதால், அங்கு செல்லும் பயணிகள் கவனத்துடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். அந்த வகையில் உதகையில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று பைன் பாரஸ்ட். கேரளா, கர்நாடகா உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வருகை புரிந்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்வது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் அண்மைக்காலமாக அப்பகுதியில் புலி ஒன்று முகாமிட்டுள்ளது. குறிப்பாக பகல் நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் வாகன நிறுத்தும் இடங்களின் அருகே உலா வருவதும், அங்கேயே ஓய்வு எடுத்துச் செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளது. இதனை பார்த்த சுற்றுலாத்தள ஊழியர்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வன சரகர் சசிகுமார் தலைமையில், வன ஊழியர்கள் புலியின்
நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் புலி அதே பகுதியில்
முகாமிட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இயற்கை
காட்சிகளை கண்டு ரசித்து செல்லுமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.