இயற்கை மொழி செயலாக்கத்தால் இயங்கும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்திய நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக வழக்கறிஞர்கள் முன்வைக்கும் வாதங்களை நேரடியாக பதிவு செய்யும் வசதி இன்று உச்ச நீதிமன்றத்தில் துவங்கி வைக்கப்பட்டது.
டெக்னாலஜி உலகில் இப்போது மக்கள் அதிகம் பேசுவது OpenAI நிறுவனத்தின் ChatGPT AI கருவியை பற்றி தான். இந்த கருவி செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயலியாகும், இது நாம் கேட்கும் கேள்விகளுக்கு மனிதர்களை போலவே பதில் அளிப்பதோடு ,மனிதர்களை போலவே சிந்திக்கும் திறனையும் இது பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது நமது உச்ச நீதிமன்றத்திலும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் உதவியை கொண்டு வழக்குகளை விசாரிக்கும் முறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேரடி டிரான்ஸ்கிரிப்ஷன் முறை என்று சொல்லப்படக்கூடிய இந்த AI வசதியை இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் சோதனையின் அடிப்படையில் இன்று துவங்கி வைத்துள்ளார். இதன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வாய்வழி வாதங்களின் பிரதிகளை பதிவு செய்வதோடு , அதனை இணையத்தில் பகிர்ந்து, வழக்கறிஞர்களுக்கும் அந்த பதிவுகள் வழங்கப்படும். இது குறித்து நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசுகையில் ”
நீதிமன்றத்தில் வாதங்களை நேரடியாக பதிவு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஆராய முயற்சிக்கிறோம். மேலும் நாங்கள் அதை ஒரு நேரடி சூழலில் செய்ய வேண்டியும் இருந்தது. எனவே இது ஒரு பரிசோதனை தான். குறைந்தபட்சம் அரசியலமைப்பு பெஞ்ச் விஷயங்களில் இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் பார்ப்போம்” என்று கூறியுள்ளார்.
இந்த செயற்கை நுண்ணறிவை சட்டத்துறையில் “கேம்-சேஞ்சர்” என்று கூறிய மற்றொரு நீதிபதி ஹிமா கோஹ்லி, AIஐ அச்சுறுத்தலாக பார்க்கக்கூடாது, ஆனால் சட்ட நடைமுறையின் தரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் வழக்கறிஞர்கள் பணிபுரியும் விதத்தில் இது ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என அவர் நம்புவதாகவும் தெரிவித்துளளார். இவரை போலவே , இந்த AI முறைக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள பல நீதிபதிகள் தங்களது வரவேற்பை தெரிவித்துள்ளதோடு, மகிழ்ச்சியையும் பகிர்ந்து வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா