உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கண்காணிப்பை மேலும், அதிகரிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கான மாநில அளவிலான பயிலரங்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த 120 அலுவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவு பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
திடீரென, தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலரிடம் கேள்வி எழுப்பிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், தேனி மாவட்டத்தில் உள்ள உணவகங்களில், எவ்வளவு பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும், உணவு விநியோகத்தில் எவ்வளவு தொண்டு நிறுவனங்களுடன் இணைத்து செயலாற்றி வருகிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் தெரியாமல் அதிகாரி திணறியதால், இது குறித்த பட்டியலை உடனடியாக தயார் செய்து வழங்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார். மேலும், குட்கா பறிமுதல் விவகாரத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








