உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்றோ அல்லது நாளையோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
உணவுத் துறை அமைச்சர் காமராஜுக்கு கடந்த ஜனவரி மாதம் கொரோன தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனையடுத்து, அமைச்சர் காமராஜின் உடல்நிலை சீரானதால் அவர் சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். மேலும், கொரோனா தொற்றிலிருந்தும் குணமடைந்தார்.
இந்த நிலையில் அமைச்சரின் உடல்நிலை குறித்து அறிய அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு வந்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். கொரோனாவால் அமைச்சர் காமராஜின் நுரையீரல் 95 சதவிகிதம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாகக் குறிப்பிட்ட அவர், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால், அவரது உடல் நிலை தற்போது சீராகியுள்ளது என்ற தகவலைத் தெரிவித்தார். இன்றோ அல்லது நாளையோ அமைச்சர் காமராஜ் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.







