மக்கள் மாற்றத்தை விரும்பினால் மூன்றாவது அணி அமைக்கத் தயார் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சியிலுள்ள அண்ணா சிலைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மக்கள் மாற்றத்தை விரும்பினால் மூன்றாவது அணி அமைக்கவும் தயார், அதற்கான தைரியம் விஜயகாந்திடம் உள்ளது, மாற்றத்தை விரும்பும் மக்கள் மூன்றாவது அணியை ஆதரிக்க வேண்டியது கடமை என்றும் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார், எம்.ஜி.ஆர் அமெரிக்காவிலிருந்து வெற்றி பெற்றது போல் விஜயகாந்தும் வெளியே வராமல் வெற்றி பெறுவார் என்ற அவர், இருந்தபோதும் வர வேண்டிய நேரத்திற்கு சரியாக வருவார் எனக் கூறினார்.
தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இருக்கிறது எனவும், தேமுதிக குறித்து முரசொலியில் வந்த கட்டுரைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறிய அவர், சசிகலா இதுவரை தன்னை ஆளுமைமிக்க தலைவராக நிரூபிக்கவில்லை, எடப்பாடி பழனிசாமியும் சட்டமன்ற உறுப்பினராக தான் தன்னை நிரூபித்துள்ளார். சசிகலாவும் எடப்பாடி பழனிசாமியும் தங்களை ஆளுமைமிக்க தலைவர்களாக, வரும் தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்தி நிரூபிக்க வேண்டும் எனக் கூறினார்.
திமுக கூட்டணிக்கு தேமுதிக செல்லுமா என்கிற கேள்விக்கு, யார் நல்லது செய்வார்கள் என மக்கள் விரும்புவார்களோ அந்த கூட்டணிக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது எனக் கூறினார்.