பட்டாசு ஆலை வெடி விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு!

ஆந்திரா தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திரப் பிரதேசம், அனகப்பள்ளி மாவட்டம் கைலாசப்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட நேரத்தில் தொழிற்சாலையில் சுமார் 15 பேர் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில் மொத்த பட்டாசு ஆலையும் இடிந்து விழுந்துள்ளது.

இந்த வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கிட பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

“ஆந்திராவின் அனகாப்பள்ளி மாவட்டத்தில் நடந்த தொழிற்சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும்”. இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.