மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் தீ விபத்து

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில், கருவறையின் மேற்கூரை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் எந்த கோயில்களுக்குள்ளும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை, இந்த நிலையில், வழக்கமான பூஜைகள்…

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில், கருவறையின் மேற்கூரை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் எந்த கோயில்களுக்குள்ளும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை, இந்த நிலையில், வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

இன்று காலை அந்தக் கோயிலின் பூசாரிகள், பூஜைகளை முடித்துவிட்டு, கருவறைக்கு வெளியே அமர்ந்திருந்த போது, திடீரென கருவறையின் மேற்கூரை தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரிகள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தக்கலை மற்றும் குளச்சல் பகுதிகளிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தீபாராதனை தட்டிலிருந்து தீ பற்றியிருக்கலாம் என தெரியவந்துள்ளது. எனினும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீவிபத்தில் கோயிலின் மேற்கூரை முழுவதும் சேதமடைந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.