உலகக்கோப்பை கால்பந்து போட்டியைக் காண படையெடுக்கும் ரசிகர் பட்டாளங்களுக்கும், கத்தார் குடிமக்களுக்கும் பல்வேறு விதிமுறைகளை கத்தார் அரசு அறிவித்துள்ளது.
கத்தார் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை தற்போது பார்க்கலாம்:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கத்தாருக்கு வருவோர் ஹயா எனும் பிரத்யேக பாஸ் மற்றும் போட்டிக்கான டிக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும். போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் தன்னுடன் மூன்று பேரை அழைத்து செல்லலாம். ஆனால் அவர்களுக்கு நுழைவுக்கட்டணமாக 500 ரியால், அதாவது 11 ஆயிரத்து 412 ரூபாய் வசூலிக்கப்படும். கத்தாரில் 21 வயதுக்கு உட்பட்ட வெளிநாட்டினர் மது அருந்தவும், மது கொண்டுவரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கத்தார் குடிமக்களும், ரசிகர்களும் ஓட்டல்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்லவும் அங்கு மதுபானங்கள் அருந்தவும் அனுமதிக்கப்படுகின்றனர். போதை பொருட்களை உபயோகிப்பதற்கு கடுமையான தடை விதித்தும்,பன்றி இறைச்சி மற்றும் “ஆபாசம்” என்று பொருள்படும் எந்த ஒரு பொருளையும் கொண்டுவர வேண்டாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கத்தாரில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமில்லை, ஆனால் அவர்கள் தோள்பட்டை முதல் முழங்கால் வரை மூடியவாறு பொது இடங்களில் உடை அணிய வேண்டும். திருமணம் செய்துகொள்ளாமல் உடலுறவு கொள்வது சட்டவிரோதமானது, அவ்வாறு நடந்துகொண்டால் அவர்கள் கசையடியால் தண்டிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தாருக்கு செல்லும் பெண்கள் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டால், போலிசாரை தொடர்பு கொள்வதற்கு முன்னதாக தங்கள் நாட்டு தூதரங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.தன்பாலின ஈர்ப்பை குற்றமாக்கும் சட்டங்கள் இருந்தாலும் கூட, LGBTQ+ உட்பட திருமணமாகாத வெவ்வேறு பாலினங்கள் ஒரே அறையில் தங்குவதற்கு எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. திருமணமானவர்கள் பொது இடங்களில் வரம்பு மீறி நடந்துகொண்டால் அது கண்டிக்கதக்க செயலாக கருதப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
முதல் இரண்டு வாரங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பொது போக்குவரத்து மற்றும் டாக்சிகளை பயன்படுத்துமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது கத்தார் அரசு. முக்கிய பகுதிகளுக்கு ரசிகர்கள் எளிதில் சென்றடைய ஏதுவாக 3,000 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கத்தாரில் தடை செய்யப்பட்ட இடங்களில் அனுமதியை மீறி வாகனங்களை இயக்கினால் 11 ஆயிரத்து 412 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
கத்தாரில் கொரோனா தடுப்பூசிகள் கட்டாயமில்லை, ஆனால் பயணத்திற்கு முன் 48 மணி நேரத்திற்குள் பிசிஆர் சோதனை அல்லது 24 மணி நேரத்திற்குள் விரைவான ஆன்டிஜென் சோதனையை மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பார்வையாளர்கள் 10 நாட்களுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளில் முகக்கவசம் கட்டாயம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
–நந்தா நாகராஜன்