தமிழகத்தில் கிராமங்கள் தோறும் விரைவில் பைபர் நெட்வொர்க் சேவை வழங்கப்படும் என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டியளித்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மின் அலுவலகம் நடைமுறைப்படுத்தும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழக அரசு விரைவில் மின்னணு சேவை மூலம் வழங்கும் திட்டங்கள் 200 லிருந்து 300ஆக உயர்த்தவும், அனைத்து அரசு திட்டங்களையும் ஆன்லைனில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆன்லைன் சேவைகளில் உள்ள குறைகளை கேட்டறிவதற்கு 2.0 திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் மூலமாக ஆன்லைன் சேவைகள் விரைவு படுத்தப்படும் எனவும், அரசு திட்டங்களுக்கு தகுதியான பொதுமக்களை தேர்ந்தெடுக்க இ-அலுவலகம் பெருமளவு பயன்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் கிராமங்கள் தோறும் விரைவில் கால வரையறைக்குள் பைபர் நெட்வொர்க் சேவை வழங்கப்படும். இ – சேவை மையங்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் சேவைகள் மூலமாக தமிழகத்தில் மாவட்டம் தோறும் 35 டன் அளவிற்கு காகித பயன்பாடு குறைந்துள்ளது. இதன் மூலமாக சுற்றுச்சூழல் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.







