கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மணலூர் ஊராட்சிக்கு உட்பட்ட T. மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுனன். கூலி தொழிலாளியான இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் அபிதா என்ற மகள் இருந்தனர். பட்டதாரியான அபிதா இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த அபிதாவின் தந்தை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். மேலும் இளைஞருடன் பேசுவதை தவிர்க்குமாறு தனது மகளிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதையும் படியுங்கள் : மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்த எஸ்.ஜே.சூர்யா.. ஹீரோ யார் தெரியுமா? – பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!
ஆனால், அபிதா அந்த இளைஞருடன் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. அவரது தந்தை அபிதாவிற்கு பல்வேறு வரன்கள் பார்த்து வந்த போதிலும், அபிதா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுனன் இன்று மதியம் அபிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கடும் கோபமடைந்த அர்ஜுனன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
தொடர்ந்து அவர் அருகில் இருந்த பாத்திரத்தில் கையை கழுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர் அர்ஜுனன் புத்தூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். காதல் விவகாரத்தில் தந்தையே மகளை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








