கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனை பராமரிக்க முடியாமல் விஷம் வைத்து கொன்றதோடு, தந்தையும்உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை லோகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மலைச்சாமி. தையல்காரரான இவருக்கு பவானிசங்கர் மற்றும் சத்தியநாராயணன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். மலைச்சாமியின் மனைவி விஜயலட்சுமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதனிடையே, மலைசாமியின் மகன் பவானிசங்கர் மனநலம் பாதிக்கப்பட்டவர். எனவே, மனைவி இறந்த பிறகு பவானிசங்கர் மற்றும் சத்திய நாராயணன் இரண்டு பேருடன் மலைசாமி வசித்து வந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தையல் தொழில் மட்டுமே பார்த்து வந்ததால், மனநலம் பாதிக்கப்பட்ட மகனை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்த மலைச்சாமி, மனநலம் பாதிக்கப்பட்ட மகன் பவானிசங்கரை கொன்று விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதையடுத்து, நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது, பவானிசங்கருக்கு விஷம் கொடுத்துள்ளார். இதனால் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் மலைச்சாமியும் விஷசத்தை குடித்து மயங்கினார்.
சத்திய நாராயணன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதால், பணி முடித்து இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை என்பதால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, தந்தையும், சகோதரரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மலைச்சாமி மற்றும் பவானிசங்கர் ஆகியோரின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டுபேரும்உயிரை மாய்த்துக் கொண்டது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.