அரசு கையகப்படுத்தும் நிலத்துக்கான இழப்பீட்டு தொகை உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகின்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 10 ஆம் முடிவுக்கு வருகிறது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இரு அவைகளிலும் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே அரசு கையகப்படுத்தும் நிலத்துக்கான இழப்பீட்டு தொகை உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நொய்டா விவசாயிகள் நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் நொய்டா விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட டெல்லி நோக்கி ட்ராக்டரில் ஊர்வலமாகச் சென்ற விவசாயிகள் நொயிடாவில் தடுத்து நிறுத்தபட்டனர். மேலும், பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் டெல்லி செல்வதை தடுக்க காவல் துறையினர் டெல்லி எல்லைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.









