பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தணிக்க செய்து மிதமான கோடை மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு மாதமாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் அதன் தாக்கம் இரவிலும் எதிரொலித்தது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளான நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தும் இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்தும் வந்தது.
பின்னா், நான்கு நாட்களாக மழை பெய்யாது போனது. அதனைத் தொடர்ந்து இன்று காலை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, பெரியகுளம் மற்றும் அதனை சுற்றி உள்ள வடுகபட்டி, முதலாக்கம்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், தேவதானப்பட்டி, .புதுப்பட்டி, தாமரைக்குளம், வடுகபட்டி, கைலாசபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
மேலும் இந்த மழையானது ஒரு மணி நேரமாக பெய்த நிலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
—கா. ரூபி







