அமோனியா கசிவு ஏற்பட்ட தொழிற்சாலைக்கு முற்றிலுமாக நாளை சீல்..!

திருவள்ளூர் அருகே அமோனியா கசிவு ஏற்பட்ட தொழிற்சாலைக்கு நாளை முழுமையாக சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் பெரியபாளையம் அருகில் உள்ள கன்னிகைப்பேர் பகுதியில் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருள்களைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த ஆலையில், கடந்த ஜூன் 21ம் தேதி குளிர்சாதனப் பிரிவில் பயன்படுத்தப்படும் அமோனியா வாயு கசிந்து விபத்து பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் மூச்சுத்தினறல் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே இந்தத் தொழிற்சாலையில் பணியாற்றிய அசாம், ஒடிசா உள்ளிட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து இறால் தொழிற்சாலையில் உள்ள அமோனியா வாயுவை டேங்கர் லாரிகள் மூலம் அதிகாரிகள் வெளியேற்றினர்.

இந்த நிலையில் அமோனியா வாயு கசிந்து விபத்து ஏற்பட்ட தனியார் கடல் உணவுகள் பதப்படுத்தும் தொழிற்சாலை அறைகளுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா உத்தரவின்படி திருவள்ளூர் கோட்டாசியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் கிடங்கு உள்ளிட்ட அனைத்து அறைகளுக்கும் படிபடியாக அதிகாரிகல் சீல் வைத்தனர்.

இந்த நிலையில் தொழிற்சாலைக்கு முற்றிலுமாக நாளை சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.