திருவிழா உட்பட எந்த நேரத்திலும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்திற்குள் பக்தர்களை தங்க அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கந்த சஷ்டியின்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் மேற்கொள்ள அனுமதி கோரி பொதுநல மனு ஒன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு, காலத்தின் சோதனைகளைத் தாங்கி நிற்கும் கோயில்கள் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்று தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழகத்தில் உள்ள கோயில்கள் தனித்துவமானதாகவும் கலை நயம்மிக்கதாகவும் திகழ்கின்றன என்று கூறிய நீதிபதிகள், தற்போதைய சூழ்நிலைகளில் அங்கு தேவையற்ற நிகழ்வுகள் நடைபெறுவதாக கூறினர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவிழா காலங்களில் பக்தர்கள் வருகை பலமடங்கு அதிகரித்து வரும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, கோயிலின் புனிதத்தை பேண வேண்டியுள்ளதாக நீதிபதிகள் கூறினர். இதனால், கோயில் பிரகாரத்தில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது நியாயமானது என கருதுவதாகவும், அதனால் அந்த தடை உத்தரவை நீட்டிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.