போடியில் இருந்து மதுரை மற்றும் சென்னை ஆகிய ஊர்களுக்குச் செல்ல வரும் பிப்ரவரி மாதம் 19-ம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுதவிர மதுரை-தேனி பயணிகள் ரயிலும் நாளை முதல் போடி வரை நீட்டிக்கப்படுவதால் தேனி மாவட்ட மக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை-போடி இடையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மீட்டர்கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் திட்டத்துக்காக கடந்த 2010-ம் ஆண்டு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பிறகு அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் நடந்தன. இந்நிலையில் தேனி வரை பணிகள் முடிவடைந்ததால், கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு பயணிகளுக்கான ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இதனால் தற்போது மதுரை – தேனி இடையே பயணிகளுக்கான சிறப்பு ரயில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து மீதமிருந்த தேனி-போடி இடையேயான 15 கி.மீ பணிகளும் முடிந்து கடந்த மாதம் 29-ம் தேதி அதிவேக சோதனை ரயில் ஓட்டமும் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையரும் ஆய்வு செய்து, இந்த பாதையில், ரயில் இயக்க ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் மதுரையில் இருந்து தேனி வரை தினமும் இயக்கப்படும் பயணிகள் ரயிலை போடி வரை நீட்டிக்க இந்திய ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் நாளை முதல் போடி வரை ரயில் இயக்கம் நீட்டிக்கப்படுகிறது.
அதன்படி தினமும் காலை 8.05 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 9.35 மணிக்கு தேனிக்கு வரும் பயணிகள் ரயில், காலை 9.42 மணிக்கு தேனியில் இருந்து போடிக்கு புறப்படுகிறது. மீண்டும் மாலை 5.50 மணிக்கு போடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரெயில் 6.15 மணிக்கு தேனிக்கு வந்தடையும். பின்னர் தேனியில் இருந்து புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை சென்றடைகிறது.
தேனியில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என்று தேனி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சென்னை-மதுரை இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் போடி வரை நீட்டிக்கவும் இந்திய ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி வாரத்தில் 3 நாட்கள் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதே போல் சென்னையில் இருந்து புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் காலை 8.20 மணிக்கு ஆண்டிப்பட்டிக்கும், 8.38 மணிக்கு தேனிக்கும், 9.35 மணிக்கு போடிக்கும் வந்தடைகிறது. அதுபோல், போடியில் இருந்து இரவு 8.30 மணிக்கு அந்த எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு தேனிக்கு இரவு 8.50 மணிக்கும், ஆண்டிப்பட்டிக்கு 9.09 மணிக்கும் வரும். மறுநாள் காலை 7.55 மணிக்கு இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை சென்றடையும். ஏறத்தாழ 12- ஆண்டுகளுக்குப் பிறகு போடிக்கு ரயில் சேவை கிடைத்துள்ளதுடன், சென்னைக்கும் நேரடி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவது தேனி மாவட்ட மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.