டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
வடஇந்தியா முழுவதும் கடும் குளிர் மக்களை வாட்டி வருகிறது. டெல்லியில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட குளிர் அதிகமாக நிலவி வருகிறது. இதனால், பல பகுதிகளில் பனிபடலம் சூழ்ந்தது போன்று காணப்படுகிறது. சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டாலும் தெரியாத அளவுக்கு கடுமையான மூடுபனி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், வருகிற 22ம் தேதி முதல் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும். இந்த நிலை வருகிற 25ம் தேதி வரை நீடிக்கும். இதனால், 23, 24 ஆகிய தேதிகளில் பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட வடமேற்கு இந்தியாவின் சமவெளி பகுதிகளில் மழை பொழிவு அதிகரித்து காணப்படும் என்று தெரிவித்து உள்ளது.
இதேபோன்று, இன்று முதல் 20ம் தேதி வரையில் வடமேற்கு இந்தியாவில் மேற்கு புறத்தில் இருந்து பலத்த குளிர் காற்று வீச கூடும். இதனால், வடமேற்கு இந்திய பகுதிகளில் குளிரலை பரவல் காணப்படும். அது நாளை உச்சம் தொடும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து காணப்படும் கடும்பனி, குளிர்காற்று மற்றும் தெளிவற்ற வானிலையால் விமானம் மற்றும் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பல்வேறு விமானங்களும் கடும் பனியால் இன்று காலதாமதமுடன் இயக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் இன்று தெரிவித்து உள்ளனர்.
இதேபோல் உறைபனியால் 6 ரெயில்களின் சேவையில் இன்று காலதாமதம் ஏற்படும் என வடக்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது. ரெயில்களின் இயக்கத்தில் 1 மணிநேரம் வரை காலதாமதம் இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.