ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் ஜனவரியில் தொடக்கம்

ஆதிச்சநல்லூரில் ஐந்து இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் அகழாய்வு பணிகள் தொடங்கவுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்…

ஆதிச்சநல்லூரில் ஐந்து இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் அகழாய்வு பணிகள் தொடங்கவுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம்
வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020ம் ஆண்டு மத்திய
பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த வருடம் அக்டோபர்
மாதம் மூன்று இடங்களை தேர்வு செய்து அகழாய்வு பணிகள் தொடங்கியது. அகழாய்வு
பணியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார். இந்த அகழாய்வு பணியில் 100 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு
பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், சங்க கால வாழ்விடம் பகுதிகள், வெண்கலத்தால்
ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில்
முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் என ஏராளமான பொருட்கள்
கிடைத்தது. இந்த பணிகள் கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் நிறைவு பெற்றது. இந்த நிலையில் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஆதிச்சநல்லூர் பகுதியில் வாழ்ந்த
மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்கு அனுமதி பெற உள்ளதாகவும் அனுமதி
கிடைத்த பின்னர் வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்கான அகழாய்வு பணிகள் தொடங்கும் என்று ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த ஆதிமனிதனின் வாழ்விடப்
பகுதிகளை கண்டறிய ஐந்து இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி
அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் கால்வாய், கருங்குளம்,
கொங்கராயகுறிச்சி, அகரம், திருக்கோளூர் ஆகிய ஐந்து இடங்களில் மத்திய தொல்லியல்
துறை ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகள் ஜனவரி மாதத்தில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூரில் இதுவரை புதைவிடங்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில்
மிகப்பெரிய அளவில் வாழ்விடப் பகுதியில் எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே
வருகின்ற காலங்களில் நடைபெற உள்ள வாழ்விடப் பகுதிகளை கண்டறியும் அகழாய்வு பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் என்று சமூக ஆர்வலர்கள்
தரப்பில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.