10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத் தேர்வு நடத்தப்படாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சம் மாணவர்களும், 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தலா 8 லட்சம் மாணவர்களும் எழுதினர். பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி ஜூன் 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாநிலம் முழுவதும் 140க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள்களைத் திருத்தும் பணி நடைபெறுகிறது. விடைத்தாள்கள் திருத்தும் பணியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி வரும் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த பின் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 17ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 23ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும் வெளியாகவுள்ளன.
இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிக்கு பல இடங்களில் போதிய ஆசிரியர்கள் வராத காரணத்தால் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்படுவதாகப் புகார் வந்துள்ளன. விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர்களை விடுவிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதால் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.