ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா மறைவையடுத்து அந்த தொகுதியில், கடந்த மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியினர். இவர்களுடன் 73 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். 70 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சித்தோடு பகுதியில் உள்ள கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை வகிக்க, இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தொடர்ந்தார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன், இந்த தொகுதியில் 2011-ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற தேமுதிகாவை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்தித்தார். அப்போது ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவு குறித்து பேசிய அவர், அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாங்கள் அனைவரும் ஒன்றாக, ஒருங்கிணைந்து தான் உள்ளோம். ஈரோடு கிழக்கில் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் அங்கையே முகாமிட்டு வாக்காளர்களை ஆடுமாடுகளை போல அடைத்து வைத்திருந்தனர். அதிமுக கூட்டத்திற்கு வரக்கூடாது என்பதற்காக திமுகவினர் பணம் கொடுத்தனர். சுமார் 400 கோடி ரூபாய் செலவு செய்து பெற்றது தோல்விகரமான வெற்றி தான். திமுக வெற்றி கோழைத்தனமான வெற்றி. இந்த வெற்றியின் தாக்கம் எந்த வகையிலும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது.
இவற்றையெல்லாம் தாண்டி 43 ஆயிரம் வாக்குகளை அதிமுக பெற்றிருப்பது திமுகவுக்கும் முதலமைச்சருக்கும் ஏமாற்றம் தான் ஈரோடு கிழக்கு பார்முலா தான் தற்போது புதுசு. மக்களை அடைத்து வைத்த யுக்தியை எந்த கட்சியும் மேற்கொள்ளவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவளிப்பார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் ஓ பன்னீர்செல்வம், சசிகலா குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்போம். சசிகலா அவரின் கடமையை செய்யட்டும். எங்களை விடுத்துவிட்டு டிடிவி, சசிகலா, ஓ பி எஸ் ஆகியோரை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடட்டும் என்று கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா