ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாந்த், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் இரண்டு அணிகளாக பிரிந்து எடப்பாடி பழனிசாமி சார்பில் கே.எஸ்.தென்னரசு மற்றும் ஓபிஎஸ் சார்பில் செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட இபிஎஸ் ஆதரவாளரான கே.எஸ் தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார். இதையடுத்தது ஓபிஎஸ் தென்னரசுவிற்கு ஆதரவு தெரிவித்து தான் வேட்பாளராக அறிவித்திருந்த செந்தில் முருகனை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கி ஏழு நாட்கள் நடைபெற்றது . தினமும் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடந்தது. கடந்த 4-ந் தேதி வரை 5 நாட்களில் 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் 6-வது நாளான நேற்று நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளரான சீதாலட்சுமி , அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பில் ஈரோடு காசிபாளையத்தை சேர்ந்த பிரேம்நாத், இந்திய குடியரசு கட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு பகுதியை சேர்ந்த மணி, அனைத்து இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் சார்பில் பேராயர் காட்பிரே வாஷிங்டன் நோபுள், அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கட்சி சார்பில் சுந்தராஜன் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 7-வது நாளான இன்று அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தார். இறுதி நாளான இன்று 17 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதுவரை கடந்த 7 நாட்களில் 75-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்புமனுக்களை மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு வரும் 10-ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
- பி.ஜேம்ஸ் லிசா