ஈரோடு அருகே காட்டன் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், சித்தோடு அருகே உள்ள ஆட்டையம்பாளையம் பகுதியில் நூல் மில் நடத்தி வருகிறார். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஆலையில் 8 பேர் மட்டுமே பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், அந்த ஆலையில் நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், இந்த விபத்தில், இயந்திரங்கள் உள்பட 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக தீப்பற்றியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







