ஈரோடு இடைத்தேர்தலில் தான் அறிவிக்கும் வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும் என்று அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதேபோல் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதாக இன்று காலை தெரிவித்ததோடு, தமாக தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.
இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை, அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தான் அறிவிக்க கூடிய வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று ஓபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக இபிஎஸ் தரப்பு அதிமுக மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், ஜெயக்குமார், வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து, ஈரோடு இடைத்தேர்தலில் தங்கள் தரப்புக்கு ஆதரவு தரவேண்டுமென்று கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.