ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரசு கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைதொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதில் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, தங்களது வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டத்தை சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடத்தியது. தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து துறை நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருந்தார். காங்கிரசு சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் மற்றும் காங்கிரசு கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் ஆகிய இருவரும் குண்டுராவிடம் விருப்ப மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் காங்கிரசு கட்சியின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரும், பொதுச் செயலாளருமான முகுல் வாஷ்னிக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது..
“ காங்கிரசு கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவின் ஒப்புதலின்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்” என முகுல் வாஷ்னிக் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் போட்டியிடுவார் என நியூஸ் 7 தமிழ் கடந்த 11ம் தேதியே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. காங்கிரசு கட்சி அதிகாரப்பூர்வமாக தங்களது வேட்பாளரை அறிவித்த ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.