ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தேர்தல் பணி குழு மற்றும் வார்டு கிளைக் கழக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இந்தக் கூட்டத்தில் அவைத்தலைவர்,தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,கே வி ராமலிங்கம், ராஜேந்திர பாலாஜி, உடுமலை ராதாகிருஷ்ணன், செல்லூர் ராஜு, எஸ் பி சண்முகநாதன், எம் எஸ் எம் ஆனந்தன், மாதவரம் மூர்த்தி மற்றும் முன்னாள் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்துக்குப் பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்” என்று கூறினார்.
முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசுவின் பெயர் தேர்தல் பணிக் குழுவில் இடம் பெறவில்லை. இதை வைத்துப் பார்க்கும்போது கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.







