நுழைவுத் தேர்வை எந்த ரூபத்திலும் அனுமதிக்க முடியாது; அமைச்சர் பொன்முடி

தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வை எந்த ரூபத்திலும் அனுமதிக்க முடியாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர்…

தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வை எந்த ரூபத்திலும் அனுமதிக்க முடியாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வை அனுமதிக்க கூடாது எனவும், தமிழ்நாடு அரசு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் வரும் கல்லூரிகளுக்கு UG, PG சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்த UGC அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டுமே மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு கூடாது என்பதே அரசின் எண்ணம் என்று தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு எந்த ரூபத்தில் நுழைய முயற்சித்தாலும் அதனை முதலமைச்சர் தீவிரமாக எதிர்பார் என்றும், கலைக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தொடர்ந்து, பல்கலைக்கழகங்களின் சீரமைப்பை முதலமைச்சர் நேரடியாக கண்காணித்து வருவதாக தெரிவித்த அவர், கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு முழு முயற்சி மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஜி.கே.மணி, கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளுக்கு பாமக உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.