பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மகன் மற்றும் மருமகன் ஆதவ் அர்ஜுன் ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது வருமானவரித்துறை மற்றும் அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் மார்ட்டினின் மருமகனும், அரைஸ் குழுமத்தின் நிர்வாகியும், தமிழ்நாடு கூடைப்பந்து சங்க தலைவருமான ஆதவ் அர்ஜுனின், அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், பிரபல தொழில் அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அவரது மகன் வீடுகளிலும் அமலாக்கதுறை அதிகாரிகள் இன்று சோதனை செய்து வருகின்றனர். சென்னையில் மார்டினுக்கு சொந்தமான 5 இடங்களில் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுதவிர மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் வீட்டில் கடந்த மாதம் வருமான வரித்துறையினரின் சோதனையை தொடர்ந்து, இன்று மீண்டும் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கேரளாவில் இருந்து வந்த அமலாக்கதுறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை சோதனை செய்த்ததில் 173 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா