சென்னை எழும்பூர், அண்ணாசாலை உட்பட செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 15 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமாக சிமெண்ட் நிறுவனம், நிலக்கரி நிறுவனம், சர்வதேச ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம், பள்ளிகள் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அண்ணா சாலை மற்றும் எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் இயங்கி வருகிறது. இந்த இரண்டு அலுவலகங்களிலும் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
செட்டிநாடு குழுமம் வெளிநாட்டில் ரூ. 110 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்களும், பல்வேறு வங்கிகளில் நிரந்தர வைப்புத்தொகை வைத்ததற்கான ஆதாரத்தின் அடிபடையில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கடந்த 2020ஆம் ஆண்டு மற்றும் 2015ஆம் ஆண்டு செட்டி நாடு குரூப்ஸ் தொடர்பான இடங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டு, பல கோடி மதிப்பிலான பணம் மற்றும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோன்று, ஏற்கெனவே ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வரும் நிலையில், செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா







