தேனி அருகே வீட்டுக்கடனை கட்டி முடித்த பின்னரும் பாக்கி உள்ளதாக கூறி வீட்டு சுவரில் பெயிண்டால் எழுதி சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள். ஆவணங்களை மீட்டுத் தர கோரி சமையல் பணியாளர் போலீசில் புகார்.
தேனி மாவட்டம் க.விலக்கு அருகே உள்ள அன்னை இந்திரா நகர் காலனியில் வசித்து வருபவர் பிரபு. இவர் தனியார் நிறுவனத்தில் சமையலராக பணியாற்றி வருகிறார். இவர் வசிக்கும் வீட்டின் மீது தேனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 லட்சம் அடமானக் கடன்பெற்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வாங்கிய கடனுக்கு முறையாக தவணை செலுத்தி முடித்து விட்டு ஆவணங்களை தரும்படி தனியார் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, பிரபு இன்னும் ரூ 1.50 லட்சம் வரை கடன் தொகை பாக்கி உள்ளதாகவும் அவற்றை செலுத்திவிட்டு ஆவணங்களை வாங்கி செல்லும்படி கூறி பிரபுவின் பைக்குகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பிரபு போலீசில் புகார் செய்து தனது பைக்குகளை மீட்டுள்ளார்.இந்நிலையில் பிரபு வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டுக்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டின் சுவர்களில் வீட்டுக்கடன் செலுத்தவில்லை என்று பெரிய எழுத்துக்களில் பெயிண்டால் எழுதி வைத்து சென்றுள்ளனர். இதனைக் கண்ட பிரபு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வாங்கிய கடனுக்கு மேல் பணம் செலுத்திய பின்பும் தன்னையும், தனது குடும்பத்தினரையும் மிரட்டிய தனியார் நிதிநிறுவனம் மீது க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மேலும் தனது வீட்டு ஆவணங்களை மீட்டுத்தர மாவட்ட எஸ்.பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.