ஒரு நாளில் பாஜக பெற்ற தொகை எவ்வளவு என்பது குறித்து சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே அணியின் ராஜ்ய சபா உறுப்பினரான பிரியங்கா சதுர்வேதி தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் தகவலை வெளியிட்டு விமர்சித்துள்ளார்.
தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க உச்சநீதிமன்றம் எஸ்.பி.ஐ வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, தேர்தல் பத்திர விவரங்களை வழங்க கூடுதல் கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், ஜெ.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் மார்ச் 11-ம் தேதி நடைபெற்றது.
அப்போது, நன்கொடை அளித்தவர்கள் பெயர்களை கவனமாக ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. அதற்கு காலஅவகாசம் வேண்டும் என எஸ்பிஐ வங்கி சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டிருந்தது.ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், “தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.பி.ஐ. மூன்று நாட்களுக்குள் வழங்க வேண்டும். அந்த விவரங்களை 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். உத்தரவை செயல்படுத்த தவறினால், எஸ்.பி.ஐ. அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உத்தரவிட்டார்.
தொடர்ந்து, கடந்த மார்ச் 12-ம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவின் படி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ வங்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இன்று (மார்ச் 14) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதில் 2019 ஏப்ரல் முதல் 2024 வரை தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வழங்கிய விவரங்கள் தேதி வாரியாக இடம் பெற்றுள்ளன.
https://twitter.com/priyankac19/status/1768284863113871784
இந்நிலையில், சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே அணியின் ராஜ்ய சபா உறுப்பினரான பிரியங்கா சதுர்வேதி தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ‘ஒரு நன்கொடை. ஒரு கட்சி’ என தலைப்பிடப்பட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்திய தேர்தல் ஆணையம், வெளியிட்ட தேர்தல் பத்திரங்களின் தரவை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், 2019-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி மட்டும் பாஜக கட்சி தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பெற்ற தொகை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.








