ஈகுவடார் சிறையில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து சுமார் 2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க அந்நாடு முடிவு செய்துள்ளது.
ஈகுவடார் நாட்டில் உள்ள துறைமுக நகரான கயாகுயில் (Guayaquil) சிறைச்சாலையில், கொலை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.இங்கு அடிக்கடி கோஷ்டி மோதல் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அது பெரும் கலவரமாக வெடித்தது.
இதில் 6 கைதிகள் தலை துண்டித்து கொல்லப்பட்டனர். துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் மோதலில் ஈடுபட்டதில் 118 கைதிகள் உயிரிழந்தனர். 79 கைதிகள் படுகாயமடைந்தனர்.
ஈகுவடாரில் உள்ள சிறைச்சாலைகளில் 39 ஆயிரம் கைதிகள் அடைக்கப் பட்டுள்ளதாகவும் அவர்களை கண்காணிக்க போதிய அதிகாரிகள் இல்லாததும் இதுபோன்ற வன்முறைகள் அங்கு நடப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறையில் உள்ள 2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.








