இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பது கிறிஸ்தவ மக்களின் இறைநம்பிக்கை ஆகும். இதன் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் திருநாளை கொண்டாடி வருகின்றனர். அதன்படி ஈஸ்டர் திருநாள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு எக்ஸ் தளத்தில் வாழ்த்துச் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “அனைவருக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் இந்தப் புனிதமான நல்வாய்ப்பு, சத்தியம், அன்பு, இரக்கம், தியாகம் மற்றும் மன்னிப்பு ஆகிய நற்பண்புகளைத் தழுவ நம்மை ஊக்குவிக்கிறது. இன்று நல்லிணக்கம், அமைதி மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்கான நமது உறுதியைப் புதுப்பித்து, ஒரு சிறந்த எதிர்காலத்திற்காகக் கூட்டாகப் பாடுபடுவோம்”. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள். இந்தப் புனித நாள் நம்பிக்கையையும் புதுப்பித்தலையும் கொண்டாடுகிறது. இது அனைவரின் வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும், ஒளியையும் கொண்டுவரட்டும். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் அனைவரையும் கருணையுடன் இருக்கத் தூண்டி, சமூகத்தில் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தட்டும்”. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.







