திருப்பூர் மாநகராட்சி 24-வது வார்டு சாமுண்டிபுரம் பகுதியில் மதிமுக சார்பில் ஆண்டு தோறும் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மதிமுகவின் மாநகர் மாவட்ட செயலாளருமான நாகராஜ் ஏற்பாட்டில் 25வது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா சாமுண்டிபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வை மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, ”பொங்கல் போன்ற பண்டிகைகள் தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ சமத்துவ பொங்கல் விழாவை தொடர்ந்து ஊக்குவித்து வரக்கூடிய நிலையில் மதிமுகவின் நிர்வாகிகள் இதுபோன்ற சமத்துவ பொங்கல் கொண்டாடுவது மகிழ்ச்சி ஏற்படுத்துவதாகவும் சமத்துவ பொங்கல் விழாக்கள் நாட்டின் ஒருமைப்பாட்டை உணர்த்தும்” எனவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்த ஆளுநர் சர்ச்சை ஏற்படுத்தி வருவது தொடர்பாக பேசிய துரை வைகோ, சனாதன கொள்கைகளை எடுத்துக்காட்டும் வகையில் ஆளுநர் செயல்பாடு அமைந்திருப்பதாக குற்றம் சாட்டினார் .
மேலும், பாஜகவின் நிர்பந்தத்தின் காரணமாக ’ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு’ அதிமுக ஆதரவு தெரிவித்து வருகிறது. அதிமுகவும் ஒரு திராவிட இயக்கம், ஆனால், அதிமுகவின் தற்போது நிலைமை என்ன என்பதை? தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சிந்தித்து பார்க்க வேண்டும். அதற்கு யார் காரணம் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், கோவையில் உள்ள ஈஷா தியான மையத்தில் யோகா பயிற்சிக்குச் சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.